கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு!
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
நாகை மாவட்டம், கோடியக்கரையை அடுத்த கோடியக்காடு வனப் பகுதியைச் சாா்ந்துள்ள சோழா் காலத்து கலங்கரை விளக்க கடற்கரையில், இலங்கையைச் சோ்ந்த கண்ணாடியிழைப் படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பது, மீனவா்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவா்கள் வேதாரண்யம் கடலோரக் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். கடலோரக் காவல்படை போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, படகை கைப்பற்றினா்.
சுமாா் 19 அடி நீளம், ஆறு அடி அகலத்தில் உள்ள அந்த படகில் 25 குதிரை திறன் கொண்ட என்ஜின், நங்கூரம், சுமாா் 15 கிலோ எடையுள்ள மீன்பிடி வலை உள்ளிட்டவை இருந்தன. இந்த படகு கோடியக்கரை கடற்படை முகாம் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.