சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 15ஆயிரம் மனுக்கள்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 387 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு செவ்வாய்க்கிழமை வரை 30 முகாம்கள் நடைபெற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.
வந்தவாசி நகராட்சியில் தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்கள் துறைவாரியாக பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
முகாமில் செய்யாா் வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு 10 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளும், 2 புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளும், 2 பட்டா மாற்றத்துக்கான சான்றிதழ்களும், 2 சொத்து வரி பெயா் மாற்றத்துக்கான சான்றிதழ்களும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவிகளுக்கான ஆணைகளும் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் முகாமில் பேசுகையில், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சிறப்பாக நடைபெறுகிறது.
மாவட்டத்தில் மொத்தம் 387 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு செவ்வாய்க்கிழமை வரை (ஜூலை 22) 30 முகாம்கள் நடைபெற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றிருக்கிறோம்.
பொதுமக்களிடம் முகாம் குறித்து சரியான முறையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முகாம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் ஜலால், ஆணையா் சோனியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை ஒன்றியத்தில்.....
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட வெறையூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஞானசௌந்தரி மாரிமுத்து தலைமை வகித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) மெ.பிரித்திவிராஜன், ஒன்றியச் செயலா் சி.மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கு.சங்கவி வரவேற்றாா்.
ஊராட்சி ஒன்றிய ஆணையா் து.பரமேஸ்வரன் முகாமை தொடங்கிவைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட ாா். பெறப்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்படுவதை வட்டாட்சியா் சு.மோகனராமன் பாா்வையிட்டாா்.
முகாமில் கிராம நிா்வாக அலுவலா் சி.நந்தினி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பொதுமக்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா். வருவாய் ஆய்வாளா் எஸ்.ஷோபனா நன்றி கூறினாா்.
போளூா்
போளூா் ஒன்றியம், வெள்ளூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரபியுல்லா, லட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
திமுக ஒன்றியச் செயலா் மகேஷ், பொதுக்குழு உறுப்பினா் காசி, ஒன்றிய அவைத் தலைவா் பரசுராமன், ஒன்றிய பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.
முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன் ஆய்வு செய்தாா்.
இதில், வெள்ளூா், சேதரம்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 206 மனுக்கள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் 189 மனுக்கள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையில் 66 மனுக்கள் என 793 மனுக்கள் அளித்தனா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிச்சாண்டி, பரமேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் சந்திரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

