``உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்..'' - முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு
"பசும்பொன் முத்துராமலிங்க தேவர், முருகன் அவதாரத்தில் வாழ்ந்து மறைந்தார், அவரை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன்..." என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பரபரப்பாக பேசியுள்ளார்.

பெரும் பரபரப்பு ஏற்படுத்திய மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அதிரடியாக பேசினார்.
அவரின் முழுமையான பேச்சில், "என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன், என்னை வளர்த்தது முருகன், துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கும் அதிகம், முதற்படை, ஆறாம் படை வீடு இங்குள்ளது. முருகனின் தாயாரும் முதல் தமிழ்ச்சங்கத்திற்கு தலைமையேற்று மதுரையில் தான் இருந்தார். மதுரையில் தாய், தந்தை மகன் உள்ளார். மதுரை மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அந்தப் புண்ணியத்தில்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் அவதரித்தார். தென் தமிழகத்தின் மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார், அவர் சிலையருகே மயிலும் வைக்கப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர், முருகன் அவதாரத்தில் வாழ்ந்து மறைந்தார், அவரை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன்.

நமது நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு அழிவில்லை, யாராலும் அழிக்க முடியாது, ஆலமரம் போன்றது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஆழமாக உள்ளது. முருகனின் வடிவத்தில் நமது அறம் தொடர்ந்து வளர்கிறது. தீயவர்களை வதம் செய்து அநீதியை அழித்தவர். உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்.
முருகப்பெருமானுக்காக இங்கு வந்துள்ளோம். முருகன் மாநாட்டை ஏன் குஜராத்தில் உபியில் நடத்தாலமே என சிலர் கேட்கிறார்கள், இந்த சிந்தனை ஆபத்தானது.
இந்து இந்துவாக இருந்தாலே மதவாதி என்கிறார்கள். உங்கள் நாகரிகத்தை நாங்கள் கேள்வி கேட்கவில்லை, எங்கள் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவமரியாதை செய்யாதீர்கள். அரேபியாவில் இருந்த வந்து மதத்தைகேட்க முடியுமா அதற்கான துணிச்சல் இருக்கா? சீண்டி பார்க்காதீர்கள் சாது மிரண்டால் காடுகொள்ளாது.

முருகன் தமிழ்கடவுள், ஆனால் அவர் எல்லா இடத்திலும் பரந்து இருக்கிறார் வட இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகாவில் கார்த்திகேயராக. சிலர் இங்கு நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர், நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை. கருப்பு நிறத்தை வைத்து அரசியல் செய்யும் கூட்டம் உள்ளது, முருகரை கந்தசஷ்டி கவசத்தை கிண்டல் செய்தனர் என் கடவுள், பண்பாட்டை கேலி செய்து இது தான் ஜனநாயகம் என்பார்கள். முருகனை கேள்வி கேட்க அவர்கள் யார், மற்ற மத்த்தை பேச முடியுமா? அரேபிய நாடுகளில் இருந்த வந்தவர்களை பார்த்து பேச முடியுமா? நாம் அமைதியானவர்கள்.
முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும், கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போய்விடும். அன்பு என்பது் துணிவின் அடையாளம், அன்பால் இணைவோம், ஆவேசத்தால் வெல்வோம்.
நாமே முருகனின் உணர்வாக நாச சக்திகளை நிர்மூலம் செய்வோம், நாச சக்திகளை ஆரம்பத்திலயே கிள்ளி எரியாமல் விட்டோம். (தெலுங்கில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து பேசியவர்)
நமது நாட்டில் இந்து கடவுளை நம்ப மாட்டார்கள், இதுதான் பிரச்னையே, இந்து கடவுள்களை திட்டுவதை நாத்திகர் கூட்டத்திற்கு அரசமைப்பு சட்டம் பேச்சு சுதந்திரம் கொடுத்துள்ளது. கடவுளை திட்டுவது பழக்கமாகிவிட்டது. அதனை கேட்டு அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

நான் இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் மதிக்கிறேன், அதே நேரம் எங்கள் நம்பிக்கையைப் பற்றி பேசாதீர்கள். நான் 2014-ல் கட்சி ஆரம்பிக்கும்போது, தமிழ்நாட்டில் மதுரையில் இந்துக்களின் கூட்டத்தில் இப்படி கௌரவிப்பீர்கள் என நினைத்து கூட பார்க்கவில்லை. அச்சமில்லை அச்சமில்லை என பாரதியார் கூறினார்.
அதேபோல் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும். முருகன் கொடுத்த தைரியத்தில்தான் நான் இங்கு உள்ளேன். முருகன் காட்டிய வழியில் நடந்தால் வெற்றியே கிடைக்கும். நமது பாதையில் ராட்சசகர்கள் இருந்தால் வீரவேல், வெற்றிவேல் என்றால் ஓடிப்போய் விடுவார்கள். இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து போராடினால் வெற்றி பெறலாம், சுண்டெலிகள் ஆயிரம் படையெடுத்தாலும் நகப்பாம்பு சீறினால் எலிக்கூட்டம் காணாமல் போகும், நமது எதிரிகள் சிவபெருமான் பாம்பை கண்டால் காணாமல் போவார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. தர்மத்தின் வழியில் நின்றால் மாற்றம் வருவது உறுதி. முருகனை நம்பினால் வெற்றிதான் எழுச்சிதான்" என்று பேசினார்.