என் காதலன் எனக் கூறினால் ஏமாற வேண்டாம்: சின்ன மருமகள் நடிகை வேண்டுகோள்!
என் காதலன் எனக் கூறி நேர்காணல் அளித்து வருபவரை நம்ப வேண்டாம் என சின்ன திரை நடிகை ஸ்வேதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவருக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், என் புகைப்படங்கள், விடியோக்களை பயன்படுத்தி நேர்காணல் கொடுத்து புகழ் தேட நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், என் புகழ் அல்லது கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அந்த நபருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு சின்ன மருமகள் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நாயகியாக நடிப்பவர் ஸ்வேதா. அவருக்கு ஜோடியாக நடிகர் நவின் குமார் நடித்து வருகிறார்.

12ஆம் வகுப்பு பயிலும் மாணவியான நாயகி, சூழல் காரணமாக திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டில் சந்திக்கும் சவால்களே சின்ன மருமகள் தொடரின் கதைக்கரு. இதையொட்டி காதல், உறவுகளுக்கு இடையேயான பாசம் என உணர்வுப்பூர்வமாக திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை ஸ்வேதாவின் காதலன் எனக் கூறி சமூக வலைதளங்களில் விடியோக்களையும், சில யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்களையும் அளித்து வரும் நபர் குறித்து சமூக வலைதளத்தில் ஸ்வேதா பகிர்ந்துள்ளார்.
அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு எனக் குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளதாவது,
''நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் கணவர் எனக் கூறிக்கொண்டு பொதுதளங்களில் ஒருவர் செயல்பட்டு வருகிறார். இவர் மோசடியான நபர். இவர் மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து, சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளேன். காவல் துறையினரும் அவரைத் தேடி வருகின்றனர்.
அவர் என் பெயரைக் குறிப்பிட்டு, நாங்கள் காதலித்ததாகவும், திருமணம் செய்துகொண்டதாகவும், நடக்காத விஷயங்களை கதைகளாக உருவாக்கி அதனை நேர்காணலில் கூறி வருகிறார். துரதிருஷ்டவசமாக ஒருகாலத்தில் அவரை நம்பினேன். ஆனால், அவருடைய உண்மையான சுபாவத்தையும் குற்றப்பின்னணியும் தெரிந்த பிறகு விலகிவிட்டேன்.
அவர் என் எதிர்காலத்தை சீரழிக்காத வகையில் அவர் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன். நாங்கள் இருவரும் முற்றிலுமாக பிரிந்துள்ளோம். என்னுடைய அனுமதி இல்லாமல், அவர் என்னுடைய புகைப்படங்களையும் விடியோக்களையும் பொதுதளங்களான சமூக வலைதளத்திலும் மீடியாவிலும் பயன்படுத்தி வருகிறார்.
இரக்கத்தை ஏற்படுத்தி, நாங்கள் இருவரும் தற்போதும் ஒன்றாக இருப்பதைப் போன்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கி என் புகழுக்கு கலங்கம் விளைவிக்கிறார்.
மேலும், என் பெயரை அல்லது புகைப்படங்களைப் பயன்படுத்தி அவருக்கு ஆதரவு தெரிவிப்போர் அல்லது உதவுவோர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மனரீதியிலும் உடல்ரீதியிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். இவை அனைத்தையும் தனியொருத்தியாக சந்தித்து வருகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில், தேவையற்ற நாடகங்களையும் வதந்திகளையும் ஊக்குவிக்காதீர்கள். என்னுடைய சூழலில் புரிந்துகொள்ளுங்கள். உங்காள் ஆதவுக்கு நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!