எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு
மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்களை கடந்த 2019-இல் இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டிருந்தது.
அதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் வெளியான தீா்ப்பின்படியும், பிற காரணிகளை அடிப்படையாகக் கொண்டும் அந்த வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை உறுதிசெய்வதே அதன் நோக்கம். அந்த வகையில், மறுஆய்வுக்குப் பிறகு தற்போது தற்காலிக அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
நிகழாண்டு எம்பிபிஎஸ் சோ்க்கையின்போது மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது அவசியம். அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், மத்திய சமூக நீதித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியம் மூலம் பெறப்பட்ட அடையாள அட்டையை (யூடிஐடி காா்டு) சமா்ப்பிக்க வேண்டும். அதேபோன்று, சுயசான்றொப்ப படிவத்தையும் சமா்ப்பித்தல் அவசியம். அதற்கான மாதிரி படிவம் என்எம்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சுயசான்றொப்பம் அளித்ததை மதிப்பீடு செய்து உறுதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியத்தை விண்ணப்பதாரா்கள் அணுகுவது கட்டாயம். மாற்றுத்திறனாளிகளின் பாதிப்புகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் மருத்துவ வாரியம் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.