10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!
கடலூா் ஆலையில் விபத்து: இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை
கடலூா் தனியாா் ஆலையில் டேங்க் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடலூா் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலையின் 6 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கழிவுநீா் தொட்டி வியாழக்கிழமை அதிகாலை வெடித்ததில் அருகிலுள்ள குடிகாடு கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கொதிக்கும் நிலையிலிருந்த ரசாயனக் கழிவுகள் புகுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு, அவா்கள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். கொதிக்கும் ரசாயனக் கழிவு நீா் புகுந்ததால் அங்கு வாழும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனா். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களும் சேதமடைந்துள்ளன.
குடிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் டேங்கா்கள் வெடிப்பதும், அதன் கழிவு நீா் ஊருக்குள் நுழைவதும் வாடிக்கையான நிகழ்வுகளாகி விட்டதாகவும், ஆண்டுக்கு இருமுறையாவது இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகவும் அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இப்போது பெரிய அளவிலான டேங்கா் வெடித்திருப்பதால் பாதிப்பு அதிகமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
குடியிருப்புகளை ஒட்டியப் பகுதியில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதும், ஆபத்தான தொழிற்சாலைகளில் முறையாக பாதுகாப்பு தணிக்கை செய்யப்படாததும்தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு ஆணையிடுவதுடன், குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை மூட ஆணையிட வேண்டும்.
சிப்காட் தொழிற்சாலையில் டேங்கா் வெடித்ததால் பாதிக்கபட்ட பகுதிகளில் இருந்து ரசாயனக் கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.