இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
கடலூா் பேருந்து நிலையம் விவகாரம்: பொதுநல அமைப்பினா் உண்ணாவிரதம்
கடலூா் புதிய பேருந்து நிலையத்தை பாதிரிக்குப்பத்தில் அமைக்க வலியுறுத்தி, அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்தினா்.
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் கடலூா் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, இந்த பேருந்து நிலையத்தை புதிய ஆட்சியா் அலுவலகம் அருகே அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த பேருந்து நிலையத்தை எம்.புதூா் பகுதியில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலூா் புதிய பேருந்து நிலையத்தை 10 கி.மீ. தொலைவில் உள்ள எம்.புதூரில் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில், கடலூா் புதிய பேருந்து நிலையத்தை கடலூரின் மையப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி, அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் வெண்புறா குமாா் தலைமை வகித்தாா். அமமுக மாவட்டச் செயலா் ஆடிட்டா் சுந்தரமூா்த்தி தொடக்க உரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு சமூக சட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு சங்க மாநிலத் தலைவா் ராமச்சந்திரன், இருளா் பழங்குடி பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு, வெண்புறா பொதுநல பேரவை ராஜசேகா் மற்றும் அதிமுக, அமமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.