கரூர்: விஜய் பரப்புரையில் உயிரிழப்பு; "போர்க்கால அடிப்படையில் உதவிகள்" - கனிமொழி, உதயநிதி இரங்கல்
கரூரில் விஜய்யின் பிரசாரத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சு திணறி பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும், சிலர் பலியாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் கரூரில் இன்று பரப்புரை மேற்கொண்டார். வேலுசாமிபுரத்துக்கு தாமதமாக வந்த அவர், பேசிக்கொண்டு இருக்கும்போதே அவரது வாகனத்தின் அருகே தொண்டர்கள் மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்தனர். விஜய்யே பேச்சை நிறுத்திவிட்டு, தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து, ஆம்புலன்ஸையும் அழைத்து உதவினார்.
மக்கள் கூட்ட நெரிசலில் தவிக்க, விரைந்து பேச்சை முடித்துவிட்டு, பேப்பரில் இருந்ததை வேக வேகமாக வாசித்துவிட்டு தனது பிரசார பேச்சை முடித்துக்கொண்டார்.
விஜய் பேசும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கூட்ட நெரிசலில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மயங்கியவர்களை மீட்டுச் செல்ல கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வந்ததால் கூட்டத்தின் நடுவே தள்ளு முள்ளும் ஏற்பட்டிருக்கிறது.
இதனால், பலரும் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிலர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பலர் உயிரிழந்து வருகின்றனர். இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, திமுக அமைச்சர்கள், கரூர் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் சென்னையிலிருந்து கரூர் சென்றுகொண்டிருக்கிறார்.
கனிமொழி இரங்கல்
கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த கனிமொழி, "கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், போர்க்கால அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

"அரசின் நடவடிக்கைக்கும் - மருத்துவக்குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்" - உதயநிதி
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தோர் - உடல்நலம் குன்றியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் கரூர் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இக்கட்டான சூழலில் அரசின் நடவடிக்கைக்கும் - மருத்துவக்குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.