'கலெக்டர், எஸ்.பி. நான் சொல்றததான் கேட்கணும்' - தருமபுரி திமுக மாவட்டப் பொறுப்பாளர் பேச்சு
மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அதற்கு கீழ் உள்ள அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் நேற்று(வியாழக்கிழமை) தருமபுரியில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசிய ஆடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிக்க | 'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!
அவர் பேசியதாவது:
"நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது. நீங்கள் நினைக்கிற ஆள்களை மாற்ற முடியாது. நான் கடிதம் கொடுத்தால்தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
கலெக்டர், எஸ்.பி., அதற்கு கீழ் உள்ள அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன். எந்த அதிகாரியும் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது.
விளையாடுவதற்கு இது இடமல்ல. என்னிடம் விளையாட முடியாது. அப்படி விளையாடினால் அவன் கதை முடிந்தது. தலைவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியும். அதிகாரி யாரும் என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் லெட்டர்பேடில் எனக்கு கடிதம் கொடு என்று தலைவர் சொல்லியிருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் உள்பட. பிடிஓ அலுவலகத்தில் நடைபெறும் ஏ டு இசட் அனைத்து விஷயங்களும் எனக்குத் தெரிந்தாக வேண்டும். இதற்கு முன்னால் இருந்தவர்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. ஆனால், இனி இப்படிதான்" என்று பேசியுள்ளார்.
மாவட்டப் பொறுப்பாளர் தர்மச்செல்வன் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சில நாள்களுக்கு முன்னர்தான் திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியனுக்குப் பதிலாக தர்மச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?