அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மற்றொரு விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் கிளர்ச்சிப் படையொன்று தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் ஆதரவுப்பெற்று காங்கோவினுள் இயங்கி வரும் கிளர்ச்சிப் படையான 'எம்23' (M23), தெற்கு கிவூ மாகாணத்திலுள்ள கவுமு விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் 2வது விமான நிலையத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறியுள்ளது.
இருப்பினும், இதுகுறித்து அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது கருத்தை பதிவு செய்யாததினால், காங்கோவின் கவுமு தேசிய விமான நிலையம் எம்23 கிளர்ச்சி படையினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் வட கிவூ மாகாணத்தின் தலைநகர் கோமாவை கைப்பற்றிய எம்23 கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
அதன் பின்னர், தெற்கு கிவூ மாகாணத்தின் கவுமு விமான நிலையத்தை குறிக்கோளாகக் கொண்டு முன்னேறி வந்த அவர்கள் இன்று (பிப்.14) அதனைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
காங்கோவின் கனிம வளம் அதிகமுள்ள கிழக்கு பகுதிகளின் கட்டுப்பாட்டிற்காக போட்டியிடும் 100க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களில் மிக முக்கியமான M23 கிளர்ச்சியாளர்கள்,தெற்கு கிவு மாகாணத்தின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.
தொடர்ச்சியாக, கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையில் நடக்கும் தாக்குதல்களினால் தற்போது வரை 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் இடமாற்றப்பட்டுள்ளதாக ஐநா ஆணையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.