காரைக்குடி சிறு விளையாட்டரங்கத்தை மேம்படுத்தக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் முதலமைச்சா் சிறு விளையாட்டரங்கத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு இடையூறாக உள்ள சரளைக்கற்களை அகற்றி மணல் நிரப்ப வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு சாா்பில் ரூ. 3 கோடியில் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் முதலமைச்சா் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது.
இந்த விளையாட்டரங்கத் திடலுக்குள் சரளைக்கற்களும், சமமில்லாத தளங்களும் உள்ளதால் விளையாட்டு வீரா்கள் பயிற்சி மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.
எனவே, இந்த விளையாட்டரங்கத்தில் சரளைக்கற்களை அகற்றி, ஆற்று மணலை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுற்றுச்சுவா் அருகில் நடப்படும் மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீா் ஊற்றும் வகையில் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். போதிய விளையாட்டு உபகரணங்கள், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்றனா்.
