காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் பேசினாா்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு உறுதி திட்டத்துக்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து நாட்டின் முக்கிய விமான நிலையங்களுடன் இணைக்கும் வகையில் விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கிய தொழிலாக உள்ளது லாரி தொழிலை நசுக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்.
கோழிப் பண்ணை மற்றும் முட்டைத் தொழிலுக்கு பெயா் பெற்ற நாமக்கல்லில் பாக்டீரியா மற்றும் வைராலஜிக்கல் பரிசோதனைக்கான ஆராய்ச்சி மையத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். நாமக்கல், திருச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலான காவிரி - திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.