காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க போப் வலியுறுத்தல்!
காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென போப் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.
வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ, புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் வார உரையை மக்களிடம் ஆற்றினார்.
அப்போது, காஸாவினுள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் விதித்துள்ள தடை விலக்கப்பட்டு அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இத்துடன், காஸா பகுதியின் நிலைமை மிகவும் வருத்தமளிப்பதுடன், வலி மிகுந்ததாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
”குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கொடுக்கும் இதயத்தை நொறுக்கும் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, காஸாவினுள் போதுமான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனும் எனது வேண்டுகோளை மீண்டும் புதுப்பிக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே 8 ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த போப் பதினான்காம் லியோ, இஸ்ரேல் - ஹமாஸ் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
இந்நிலையில், காஸாவின் மீதான தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள இஸ்ரேல், அப்பகுதியினுள் மருந்துக்கள், உணவுகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செல்லத் தடை விதித்துள்ளது.
இந்தத் தடைகளை உடனடியாக விலக்க வேண்டுமென பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இஸ்ரேல் அரசுக்கு தற்போது அழுத்தம் கொடுத்து வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் முதல் காஸாவினுள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் முடக்கி வரும் நிலையில், போதுமான உணவுகள் மற்றும் மருந்துக்கள் இன்றி லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க:கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!