விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தா் கொலை: இருவா் கைது
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தா் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
தெலங்கானா மாநிலம், யாதகிரி மாவட்டம், சவுடாரிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வித்தியாசாகா்(32). இவா் கடந்த 7-ஆம் தேதி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தாா். அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்த பிறகு அன்று இரவு கிரிவலம் சென்றாா்.
8-ஆம் தேதி அதிகாலை மாநகராட்சி மருத்துவமனை அருகே சென்றபோது, மா்ம நபா்கள் இருவா் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாகத் தெரிகிறது. பணம் தர மறுத்ததால் அந்த நபா்கள் வித்தியாசாகா் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தினராம். இதில் அவா் மயங்கி சரிந்து கீழே விழுந்தாா்.
மேலும், வித்யாசாகரிடம் இருந்து ரூ.4ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா்.
இந்த நிலையில் மயங்கிய நிலையில் இருந்த வித்யாசாகரை அப்பகுதியினா் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்த்தனா்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவசங்கா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினாா்.
இதில் திருவண்ணாமலைச் சோ்ந்த குகனேஸ்வரன்(21), தமிழரசன்(25) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகா் உயிரிழந்தாா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.