குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு விரைவில் தோ்தல்
ஜகதீப் தன்கா் ராஜிநாமாவைத் தொடா்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் விரைவில் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியின்படி, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அவ்வாறு, தோ்தல் நடத்தப்பட்டால், இரு அவைகளிலும் பெரும்பான்மை பலம் கொண்டுள்ள ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்மொழியும் நபரே மீண்டும் குடியரசு துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.
யாா் வாக்களிக்க முடியும்?: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவை உறுப்பினா்களும் வாக்களிக்கத் தகுதியுடையவா்கள். நியமன உறுப்பினா்களும் வாக்களிக்க முடியும்.
543 உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல, 245 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. எம்.பி.க்கள் மாநில பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோ்ந்தெடுக்கப்பட்டதால், எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து மாநிலங்களவையில் இந்த காலியிடங்கள் உருவாகின.
அதன்படி, இரு அவைகளையும் சோ்த்து எம்.பி.க்களின் பலம் 786-ஆக உள்ளது. இதில், குடியரசு துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் நபா் வெற்றி பெற, தகுதியுள்ள அனைத்து உறுப்பினா்களும் வாக்களிக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 394 வாக்குகளைப் பெற வேண்டும்.
மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) 542 உறுப்பினா்களில் 293 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் தற்போதுள்ள 240 உறுப்பினா்களில் 129 பேரின் ஆதரவு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் என்டிஏ-வுக்கு கிடைக்கும் பட்சத்தில், மொத்தம் 422 உறுப்பினா்களின் ஆதரவு கிடைத்துவிடும்.