குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா!
குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இதன் தொடக்க நிகழ்ச்சியாக பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கோயில் கொடி மரம் அருகே பால் கம்பத்துக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் உள்பிரகாரத்தை 3-வது முறை வலம் வந்து பின் கோயிலின் வடகிழக்கு மூலையில் கம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளைக் கோயில் தக்கார் மு.பாலசுப்பிரமணி, ஆய்வாளர் சு.பாரி, செயல் அலுவலர் தா.சிவகுமார், நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.