கேதாரேஷ்வர் குகைக் கோயில் தூண்கள் பற்றிய மர்மம் உண்மையா? உலக அழிவை சொல்லுமா?
மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள கேதாரேஷ்வர் குகைக் கோயிலைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். சஹ்யாத்ரி மலையின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நீடிப்பதாகத் தகவல்.
இந்த குகைக்குள் அமைந்திருக்கும் சிவபெருமானைக் கண்டு தரிசித்தவர்கள், நிச்சயம் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைப் பெற்றதாகவே சொல்வார்கள்.
இந்த கேதாரேஷ்வர் குகைக் கோயில் ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகவும், இந்த கோயில் ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதாவது, இந்த ஹரிஸ் சந்திரேஸ்வர் கோயிலுக்கு அருகே மூன்று குகைக் கோயில்கள் அமைந்துள்ளன.
அந்த மூன்று குகைகளில் ஒரு குகையில்தான் கேதாரேஷ்வர் அருள்பாலிக்கிறார். குகைக்குள் தண்ணீர் நிரம்பி, அதற்குள் ஐந்து அடியில் தெய்வீக அனுபவத்துடன் அவர் வீற்றிருக்கிறார். அந்த குளிரான தண்ணீரில் சென்றுதான் சிவலிங்கத்தை தரிசிக்க முடியும். மழைக்காலத்தில் அதுவும் முடியாது.
இப்போது முழு விவரமும், இந்த சிவலிங்கத்தைச் சுற்றியிருக்கும்-இருந்த நான்கு தூண்கள் பற்றிதான். இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிப்பதாகவும், சத்யே யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம் ஆகியவை ஒவ்வொன்றாக அழிந்த போது, இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் இருந்த தூண்கள் ஒவ்வொன்றாக விழுந்ததாகவும், தற்போது ஒரே ஒரு தூண் மட்டுமே தாங்கி நிற்பதாகவும் நம்பப்படுகிறது.
எனவே, இந்த நான்காம் தூண் கீழே விழும் போது, கலியுகமும் முடிந்துவிடும் அல்லது கலியுகம் முடியும்போது இந்த நான்காம் தூணும் விழுந்துவிடும் என்று கூறப்படுகிறது. இது பலரது நம்பிக்கையாகவே உள்ளது.
இந்த குகைக் கோயிலைப் பார்க்கும்போது இது இயற்கையின் கோயிலாகவேப் பார்க்கப்படுகிறது. இவரும் சுயம்பு மூர்த்தியாகவே அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு.