கேரளத்தில் 273 பேருக்கு கரோனா; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!
கேரளத்தில் இதுவரை 273 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமுள்ளது.
இந்நிலையில் கேரளத்தில் நேற்று(மே 23) வரை 273 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 73 பேருக்கும் எர்ணாகுளம் - 49, பத்தனம்திட்டா -30, திருச்சூர்-26 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், மாவட்ட அளவிலான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். கரோனா பாதிப்பு விவரங்களை மாவட்ட அதிகாரிகள் சரியாக வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
சளி, இருமல், தொண்டை வலி அல்லது சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் பொது இடங்களிலும் பயணங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம். மக்கள் அனைவரும் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அடிமைக் கட்சியல்ல திமுக; யாருக்கும் அடிபணிய மாட்டோம்! - உதயநிதி ஸ்டாலின்