பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை
கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரியாமல், சிறைத் துறை அதிர்ச்சியில் உள்ளது.
கன்னூர் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய குற்றவாளி கோவிந்தசாமி, கன்னூர் மாவட்டம் தலப்பு பகுதியில் இருந்த காலி மனையில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறைச்சாலையிலிருந்து, கைதி கோவிந்தசாமி அதிகாலை 4.15 மணியிலிருந்து 6.30 மணிக்குள் தப்பிச் சென்றிருக்கவேண்டும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலையில், சிறை அறைகளை, சிறைத்துறை பயிற்சி அதிகாரிகள் சோதனையிட்டபோதுதான், கோவிந்தசாமி தப்பியோடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் சுற்றுச் சுவரில், கோவிந்தசாமியின் உடைகள் தொடங்கிக் கொண்டிருந்ததால், அந்த வழியாக அவர் தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில், அருகே இருந்த தேசிய நெடுஞ்சாலையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.
கோவிந்தசாமி, சிறிய ரக கத்தியைக் கொண்டு, சிறைக் கதவின் கம்பிகளை அறுத்திருப்பதும், உடை மற்றும் போர்வையை கயிறாக மாற்றி சுவர் ஏறிக் குதித்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் வெளியாகியிருக்கிறது.
கேரள மாநிலம் கன்னூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி என்கிற சார்லே தாமஸ், வெள்ளிக்கிழமை அதிகாலை, தன்னுடைய அறையிலிருந்து காணாமல் போனார். தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த 49 வயது கோவிந்தசாமி, கேரளத்தின் மிக பயங்கர பாலியல் வன்கொடுமை, கொலையில் ஈடுபட்ட நபராக உள்ளார்.
2011ஆம் ஆண்டு, 23 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த நிலையில், தப்பியோடியது, நேற்று கன்னூர் சிறைச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், சிறைச்சாலைக்கு அருகே, காலி மனை ஒன்றில், இருந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களும் இன்று வெளியாகியிருக்கிறது.
தற்போது, சிறைச்சாலையிலிருந்து எவ்வாறு கோவிந்தசாமி தப்பிச் சென்றார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவிந்தசாமி ஒரு மாற்றுத்திறனாளி என்பதும், அவர் கைத்தடி வைத்தே நடப்பவர் என்பதும் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.