கொல்கத்தா - தில்லி போட்டி: கேப்டன்கள் ரஹானே, அக்ஷர் பட்டேல் காயம்!
கொல்கத்தா - தில்லி இடையிலான போட்டியில் கேப்டன்கள் ரஹானே, அக்ஷர் பட்டேல் இருவரும் காயமடைந்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் நேற்று தில்லி அருண் ஜேட்லி திடலில் நடைபெற்ற கொல்கத்தா - தில்லி இடையிலான பரபரப்பான போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தின் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பொறுப்பு கேப்டன் சுனில் நரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
18 வது ஓவரின்போது மிட் விக்கெட்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்த தில்லி அணியின் கேப்டன் அக்ஷர் பட்டேல் கையில் காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இருப்பினும், அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்து 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதற்கிடையில், கொல்கத்தா அணியின் கேப்டனான ரஹானேவுக்கும் ஷார்ட் கவரில் பீல்டிங் செய்யும் போது கையில் அடி விழுந்தது. அதன் பிறகு அவர் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சுனில் நரைன் பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்ரவுண்டர் அனுகுல் ராய் கூறுகையில், “ரஹானேவுக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவை இரண்டு அல்லது மூன்று நாள்களில் குணமாகும்” என்றும் தெரிவித்தார்.
தில்லி அணி 12 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கொல்கத்தா அணி 9 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன.
இதையும் படிக்க:சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஆர்சிபி வீரர்கள்!