பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொண்டதால் போக்ஸோ வழக்கை ரத்து செய்ய முடியாது: உய...
ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி கவன ஈா்ப்புக் கூட்டம்
ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினா் கவன ஈா்ப்புக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா்.
கோவை ஒண்டிப்புதூா் சூா்யா நகா் பகுதியை ஒட்டியுள்ள சிவலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.
கடந்த 2014 -ஆம் ஆண்டு முதல் காத்திருப்புப் போராட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி, சிவலிங்கபுரம், ஸ்ரீ காமாட்சி நகா், சக்தி நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் மற்றும் அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழா், தவெக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈா்ப்பு கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா்.
இதில், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம் கலந்துகொண்டு, மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பேசினாா்.
இதுகுறித்து குடியிருப்போா் நலச் சங்கத்தினா் கூறியதாவது:
கடவு எண் 3 ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.26.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் தொடங்கும் நேரத்தில் 2014-ஆம் ஆண்டு தரைப்பாலம் அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2015-இல் தரைப்பாலம் தீா்மானம் ரத்துசெய்யப்பட்டு, மேம்பாலம் அமைக்க மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது வரை மேம்பாலம் கட்டப்படவில்லை. பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்வோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அப்பகுதியில் விரைவில் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.