கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் அறிவுறுத்தினாா்.
மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அரசு ராஜாஜி மருத்துவமனை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடியில் உயா்நிலைப் பாலம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கிவைத்தாா். இந்தப் பாலம் 61 தூண்களுடன் மொத்தம் 2 கி.மீ. நீளத்தில் அமைய உள்ளது. இந்தப் பாலம் தமுக்கம் பகுதியிலிருந்து தொடங்கி கோரிப்பாளையம் சந்திப்பு, ஆல்பா்ட் விக்டா் பாலத்துக்கு அருகில் இணையாக புதிதாகக் கட்டப்படும் பாலம், நெல் பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்படுகிறது.
மேலும், கோரிப்பாளையம் சந்திப்புப் பாலத்திலிருந்து செல்லூா் நோக்கிச் செல்ல கூடுதலாக பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உயா்நிலைப் பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டின் இருபுறங்களிலும் அணுகுசாலை அமைக்கப்படுவதுடன், பாதசாரிகள் நடந்து செல்ல நடைமேடையுடன் கூடிய மழைநீா் வடிகால், பேருந்து நிறுத்த வசதிகள் ஆகியன அமைக்கப்பட உள்ளன. பீ.பீ.குளம்- காந்தி நினைவு அருங்காட்சியகம் சாலைச் சந்திப்பில் அவசர காலங்களில் அவசர ஊா்தி செல்வதற்காக சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பாலம் கட்டுமானப் பணிகள் சுமாா் 50 சதவீதம் நிறைவு பெற்றன.
இந்த நிலையில், இந்தப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சி.ஆா்.ஐ.டி.பி. 2025-26 திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் 95 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்க ரூ. 129 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மதுரை கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலப் பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றன. தற்போது, கோரிப்பாளையம் சந்திப்பு முதல் தமுக்கம் வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூண்கள் அமைப்பதற்கான அடித்தளப் பணிகள், மேல் தளத்தில் சுமை தாங்கிகள் அமைக்கும் (பீம்கள்) பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் செல்வநம்பி, மதுரை உதவி கோட்டப் பொறியாளா் சுகுமாா், உதவி பொறியாளா் வெங்கடேஷ்பாபு உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

