கோலாகலமாக நடந்தேறிய தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்!
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தேறியது.
பிரசித்தி பெற்ற பழமையான காசி விஸ்வநாதர் கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 30-ம் ததி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வார பூஜையுடன் ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 5 மணிக்கு விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கும், 7 மணிக்கு மகா பூர்ணாகுதி நடைபெற்றது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசி விஸ்வநாதசுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து மகாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.