பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா: அடுத்து என்ன நடக்கும்?
சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மகா. அமைச்சர்? பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்
மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சட்டமன்ற உறுப்பினர் ரோஹித் பவார் இரண்டு வீடியோக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் மாநில வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தனது மொபைல் போனில் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தார்.
இது குறித்து ரோஹித் பவார் வெளியிட்டுள்ள பதிவில், ''எண்ணற்ற வேளாண் பிரச்னைகள் நிலுவையில் இருக்கின்றன. தினமும் 8 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். அதனைத் தடுக்க அமைச்சருக்கு நேரம் இல்லை. ஆனால் ரம்மி விளையாடுவதற்கு மட்டும் அமைச்சருக்கு நேரம் இருக்கிறது.
இது போன்ற அமைச்சர்கள் மற்றும் அரசாங்கம் விவசாயிகளின் பயிர்க் காப்பீடு, கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச ஆதரவு விலை கோரிக்கைகளைக் கேட்பார்களா? ஏழை விவசாயிகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள் மகாராஜா'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் மாணிக்ராவ் கூறுகையில், ''கேமரா எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது சட்டமன்றத்திலிருந்து கொண்டு ஏன் ரம்மி விளையாட வேண்டும். நான் சட்டமேலவையில் இருந்தேன்.
சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள யூடியூப்பைப் பார்க்க எனது மொபைல் போனை எடுத்தேன். அந்நேரம் ரம்மி விளையாட்டு தொடர்பான விளம்பரம் வந்துவிட்டது. அதிலிருந்து வெளியில் வர முயன்றேன். ஆனால் முடியவில்லை.
அதிலிருந்து வெளியில் வர இரண்டு முறை முயன்றேன். ஆனால் எப்படி வெளியில் வருவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அடுத்த சில விநாடிகளில் வெளியில் வந்துவிட்டேன். எதிர்க்கட்சிகள் முழுமையான வீடியோவைப் பார்க்காமல் என்னைக் குற்றம் சாட்டுகின்றன. முழுமையான வீடியோவைப் பார்த்தால் நான் அதிலிருந்து வெளியில் வர முயன்றது தெரியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜய் கூறுகையில், ''விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் ரம்மி விளையாடிக்கொண்டிருக்கிறார். விவசாயிகள் அரசுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும்'' என்று தெரிவித்தார்.
வீடியோ வெளியானதைத் தொடர்ந்து லாத்தூரில் தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) மாநிலத் தலைவர் சுனில் தட்கரே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் மாணிக்ராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி, சாவா சங்கட்டனா என்ற மராத்தா அமைப்பு சுனில் தட்கரே மீது விளையாடப் பயன்படும் சீட்டுக்களை எடுத்து வீசினர்.

இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாணிக்ராவ் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
மகாராஷ்டிராவில் சரத்பவார் மற்றும் துணை முதல்வர் அஜித்பவார் ஆகியோர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் ஒன்றாக இணைவது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே அளித்திருந்த பேட்டியில், ''பா.ஜ.கவிடம் கலந்து பேசித்தான் இரண்டு அணிகளும் ஒன்று சேருவது குறித்து முடிவு செய்ய முடியும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.