சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!
குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய வங்கதேசத்தினர் 15 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும், 35 பேர் மார்ச் மாத இறுதிக்குள் நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தலைநகர் அகமதாபாத் குற்றப்பிரிவு காவல் துறையினர் சதோலா ஏரி சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய ஒரு சிறுமி உள்பட 50 பேர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் போலி ஆதார் அட்டை உள்பட போலியான இந்திய ஆவணங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும், வங்கதேசத்து பெண்களையும் சிறுமிகளையும் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றமைப்பை அம்மாநில அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தந்தை மீது மகள் புகார்! தாயின் உடல் தோண்டியெடுப்பு!
இந்நிலையில், அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் சமூக விரோதிகளின் அழுத்ததினால் அகமதாபாத்தில் தங்கியிருந்ததுடன், கட்டாயப்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பின்னர், அவர்களிடம் வங்கதேச ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணித் துவங்கியது.
தற்போது வங்கதேசத்தின் தூதரகம் 15 பேரது குடியுரிமைக்கான ஆவணங்களை வழங்கியதைத் தொடர்ந்து ஒரு குழந்தை உள்பட 15 பேர் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், மீதமுள்ள 35 பேரையும் வருகின்ற மார்ச் மாத இறுதிக்குள் நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மாநில காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் சட்டவிரோதமாக வங்கதேசத்து பெண்களை இந்தியாவிற்குள் அழைத்து வரும் தரகர்கள் அவர்களை பாலியல் தொழிகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் வரும் பணத்தை வர்த்தகம் எனும் பேரில் வங்கதேசத்துக்கு அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.