`சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம்’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு
கடந்த சில நாள்களாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவில் வழிபடுவது குறித்து இரண்டு மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தும் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஜைன மடம் சார்பில் ஸ்வஸ்தி லட்சுமிசேனா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "மதுரை திருப்பரங்குன்றம் மலையில் சமண நினைவுச் சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால், தற்போது திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என பல இந்து அமைப்புகள் கூறி வருகின்றன.
திருப்பரங்குன்றம் மலையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள், அவை சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்துகிறது.
திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தலமாகும். திருப்பரங்குன்றம் மலையில் ஒரே இடத்தில் சுமார் 1 அடி உயரத்தில் இரண்டு சமண பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த மலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளில் உள்ள சமண குகைகளை சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது அவமரியாதை செய்யும் வகையில் உள்ளதோடு சமண மக்களின் மத உணர்வுகளை பாதித்துள்ளது.
இந்த சட்ட விரோத செயல்களால் திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிப்பதோடு, திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுத்து, தொல்லியல்துறை பராமரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, "திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அரசு யரிடமும் மத பாகுபாட்டை காட்ட விரும்பவில்லை. நல்லிணக்கத்தையே விரும்புகிறது" என தெரிவிக்கப்பட்டது.
தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கை நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளோடு சேர்த்து பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play