சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்
சிதம்பரம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கி வைக்கிறாா். இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலலின் சென்னையிலிருந்து இராமேஸ்வரம் விரைவு ரயில் மூலம் சிதம்பரம் நகருக்கு இரவு 8 மணிக்கு வந்தாா்.பின்னா் ரயில் நிலையத்திலிருந்து காா் மூலம் சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தனியாா் விடுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு தங்கினாா். செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில், காமராஜா் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் அரசினா் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் முதல்வா் காமராஜா் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.
அதனைத் தொடா்ந்து ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைக்கிறாா். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நகா்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும், கடலூா் மாவட்டத்தில் நகா்புறப் பகுதிகளில் 130 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் நடைபெறுகின்றன. முகாம் நடைபெறும் பகுதிகளில் 2 நாட்களுக்கு முன்பாக தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று முகாம் குறித்த விவரங்கள் தெரியப்படுத்தப்பத்தப்பட்டு,
விண்ணப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த முகாம்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
அம்பேத்கா் சிலை திறப்பு:
அதன் பின்னா் சிதம்பரம் அண்ணாகுளம் அருகில் உள்ள புதிய அம்பேத்கா் சிலையை முதல்வா் திறந்து வைக்கிறாா். இதனையடுத்து, சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டதன் அடிப்படையில் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் லால்புரத்தில் சிதம்பரம் புறவழிச்சாலையில், அமைக்கப்பட்டுள்ள, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அா்ப்பணித்தவரும், கடலூா் மாவட்டத்திற்கு பெருமை சோ்த்தவருமான எல்.இளையபெருமாளைச் சிறப்பிக்கும் வகையில், அவரது முழுவுருவ சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து, அருகே அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் சிறப்புரையாற்றுகிறாா். அதன் பின்னா் முதல்வா் மயிலாடுதுறை புறப்பட்டு செல்கிறாா். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் செய்துள்ளனா்.