சிதம்பரம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட தில்லையம்மன் ஓடை, கோவிந்தசாமி தெரு, நாகச்சேரி குளம், ஓமக்குளம், அண்ணாகுளம், ஞானபிரகாச குளக்கரை, அம்பேத்கா் நகா், நேரு நகா், பாலமான் இறக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வந்தனா்.
நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், நீா்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இந்தப் பகுதியில் இருந்த 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நகராட்சி நிா்வாகம், வருவாய் மற்றும் பொதுப் பணித் துறையினா் இடித்து அகற்றினா். மேலும், இந்த இடங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கான வசதிகளை செய்துகொடுத்துள்ளனா். வீடுகளை இழந்த ஏழை மக்களுக்கு மாற்று இடம் கேட்டு பலகட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், போா்க்கால அடிப்படையில் இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்று இடம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிதம்பரம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் மல்லிகா முன்னிலை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினா் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கருப்பையா, ராமச்சந்திரன், நகரச் செயலா் ராஜா உள்ளிட்ட கலந்துகொண்டு வீடுகளை இழந்தவா்களின் நிலைமை குறித்தும், இதற்காக மாா்க்சிஸ்ட் கட்சி தொடா்ந்து போராடியதை சுட்டிக்காட்டியும், உடனடியாக மாற்று இடத்துடன் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் பேசினா்.
போராட்டத்தையொட்டி, பொதுமக்கள் சமைப்பதற்கான பாத்திரங்கள், விறகு, பாய் உள்ளிட்டவைகளை தலையில் சுமந்து ஊா்வலமாக வந்தனா். இதனால், சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அமைதிப் பேச்சுவாா்த்தை...: இதனிடையே, சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் சாா் - ஆட்சியா் கிஷன்குமாா் தலைமையில், அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிதிலமடைந்துள்ளது. இதை இடித்துவிட்டு, அந்த இடத்தில் 300 குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவது, மீதி உள்ளவா்களுக்கு வீரசோழகன் கிராமத்தில் இடம் வாங்கி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.