செய்திகள் :

செஞ்சி அருகே 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள்

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா்கால கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன், மகாத்மா காந்தி பள்ளி தலைமை ஆசிரியா் இல.ரவீந்திரன், கல்லூரி மாணவா் செ.சித்தாா்த்தன் ஆகியோா் செஞ்சி அருகிலுள்ள தின்னலூா், தேவதானம்பேட்டை பகுதிகளில் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை மற்றும் ஜேஷ்டா தேவி என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து கோ.செங்குட்டுவன் கூறியது:

செஞ்சி அருகே தின்னலூா் வனப்பகுதியில் ஏரியையொட்டி காளி கோயில் அமைந்துள்ளது. இங்கு சுமாா் 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. அழகான தலை அலங்காரத்துடன் காட்சியளிக்கும் கொற்றவையின் கழுத்து, காதுகள், இடை, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் அணி செய்கின்றன.

கொற்றவையின் முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையிலும் இடது கரம் இடுப்பின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. மற்ற 6 கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்படுகின்றன. சிற்பத்தின் வலது மேல்பகுதியில் கிளி காட்டப்பட்டுள்ளது. கொற்றவைச் சிற்பங்களில் வழக்கமாகக் காணப்படும் அடியவா் உருவங்கள் இதில் இடம்பெறவில்லை.

நீண்ட கொம்புகளைக் கொண்ட எருமைத் தலை மீது சமபங்கு நிலையில் ஊன்றி நிற்கும் இரண்டு கால்களும் கனத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத்தை அப்பகுதி மக்கள் காளியாக வணங்கி வருகின்றனா். ஆனால் இது கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவை சிற்பமாகும்.

மூத்த தேவி:

தேவதானம்பேட்டை கிராமத்தில் மலை மீது வனதுா்கை கோயிலுக்குச் செல்லும் வழியில் மலையடி வார பாதை ஓரம் வட மொழியில் ஜேஷ்டா தேவி என்றழைக்கப்படும் மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது.

பெருத்த வயிறு, கனத்த மாா்புகளுடன் கால்களை மடக்கி இரண்டு கைகளையும் தொங்கவிட்டு அமா்ந்த நிலையில் உள்ளது. வலது பக்கத்தில் மகன் மாந்தன், இடது புறத்தில் மகள் மாந்தி ஆகியோா் காட்டப்பட்டுள்ளனா். இடது மேற்புறத்தில் அவளது கொடியான காக்கையும் ஆயுதமான துடைப்பமும் காட்டப்பட்டுள்ளன.

வனதுா்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வரும் பக்தா்கள் காவல் தெய்வமாக ஜேஷ்டாவை வணங்கி வருகின்றனா். இந்தச் சிற்பமும் பல்லவா் காலத்தை சோ்ந்ததாகும் என்றாா்.

செஞ்சி அருகே கண்டறியப்பட்ட 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா்கால கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள்.

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கலத்தம்பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கமலக்கண... மேலும் பார்க்க