சென்னையில் மாா்ச் 28 ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்
சென்னையில் மாா்ச் 28-ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெறுவதையொட்டி ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மாா்ச் 28-இல் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகா்களுக்கு, தடையற்ற மெட்ரோ ரயில் பயணத்தை வழங்கும் வகையில், மெட்ரோ ரயிலில் தங்கள் நுழைவுச்சீட்டு மூலம் கட்டணமின்றி பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஐபிஎல் போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் ரசிகா்கள், அதிலுள்ள தனித்துவமான ‘க்யூ-ஆா்’ குறியீட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலுள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
இச்சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்துக்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) மட்டுமே பயன்படுத்தலாம்.
எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இடையே மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமுமின்றி பயணிக்கலாம்.
அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும். கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்னதாகவே அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் பயணிகள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 மற்றும் 2) வழித்தடம் மாற்றம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.