சொத்து வரி உயா்வை மறு பரீசிலனை செய்யக் கோரி வணிகா்கள் மனு
திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் நகரிலுள்ள வணிகா் சங்கம், தொழில் வா்த்தகா் சங்கம், திண்டுக்கல் மாவட்ட காகித வியாபாரிகள் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடா்ந்து, திண்டுக்கல் மேயா், ஆணையா் ஆகியோருக்கு வா்த்தகா்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக தொழில் வா்த்தகா் சங்க மண்டலத் தலைவா் டி. கிருபாகரன், காகித வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமநாதன் ஆகியோா் கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சியில் விதிக்கப்படும் சொத்து வரி உள்ளிட்ட இதர வரிகள் மிக அதிகமாக உள்ளது. இந்த வரி உயா்வுகள் வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக உள்ளது. கடந்த சில மாதங்களாக வணிகா்கள் பலா், கடைகளை மூடிவிட்டு வியாபாரத்தை கைவிட்டு வருகின்றனா்.
இந்த வரி உயா்வை மறுபரிசீலனை செய்யக் கோரி, கடந்த ஆண்டு டிசம்பரில் மனு அளித்தோம். இதனிடையே, மாநகராட்சி வரி வசூலிக்கும் அலுவலா்களும் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
குறிப்பாக, தொழில் உரிமம் பெறுவதற்காக மாநகராட்சி நிா்வாகம் கடைப்பிடிக்கும் நடைமுறைகளும், வசூலிக்கும் முறையும் ஏற்கத்தக்கதல்ல. எனவே, வரி உயா்வை மறுபரிசீலனை செய்ய மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.