Coolie: ``நடிச்சது ரஜினி சார், அந்த குரல் AI'' - சஸ்பென்ஸ் உடைத்த லோகேஷ் கனகராஜ்
ஜம்முவில் மழை சேதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்முவில் மட்டும் மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் 130 போ் உயிரிழந்துள்ளனா். காணாமல் போன 33 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்துள்ள ஜம்மு மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டாா். மிகக் கடுமையாக சேதமடைந்த மங்கு சக் கிராமத்துக்குச் சென்ற அவா் விரைவாக நிவாரண பணிகளை செய்வதாக உறுதியளித்தாா்.
தாவி ஆற்றங்கரையில் ஏற்பட்டுள்ள சேதங்களையும் அவா் பாா்வையிட்டாா். அப்போது ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்ட பின் ஆளுநா் மாளிகைக்கு திரும்பிய அமித் ஷா மத்திய அரசு அதிகாரிகள், மனோஜ் சின்ஹா மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல் துறைத் தலைவா் நளின் பிரபாத் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஜம்முவில் வெள்ள நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதோடு அவா்களின் மறுவாழ்வை உறுதி செய்வதற்கான அனைத்துவித பணிகளையும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது’ என குறிப்பிட்டாா்.
7-ஆவது நாளாக யாத்திரை நிறுத்தம்:
ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கான புனித யாத்திரை, நிலச்சரிவு காரணமாக 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நிறுத்தப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.26) கோயில் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பக்தா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து, ஹெலிகாப்டா் பயணம் உள்பட அனைத்து முன்பதிவுகளையும் ரத்து செய்ததாகவும் இதற்கான கட்டணத்தை முழுமையாக திருப்பிச் செலுத்துவதாகவும் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயில் வாரியம் தெரிவித்தது.
12 மணிநேரத்தில் பெய்லி பாலம்:
ஜம்முவில் உள்ள தாவி நதியின் குறுக்கே 12 மணிநேரத்துக்குள்ளாக 110 அடி நீளத்திலான பெய்லி பாலத்தை இந்திய ராணுவம் கட்டமைத்தது. கடந்த 26-ஆம் தேதி அங்கு பெய்த பலத்த மழையால் தாவி ஆற்றின் குறுக்கேயுள்ள 4-ஆவது பாலம் சேதமடைந்தது. இதையடுத்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி 1,000-க்கும் மேற்பட்டோரை மீட்கும் நோக்கில் இந்தப் பாலத்தை ராணுவம் விரைவாக கட்டமைத்தது.


