Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
ஜூன் 25-இல் மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் அமாவாசை திருவிழா: முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் ஜூன் 25 ஆம் தேதி அமாவாசை உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் பேசியதாவது: மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் ஜூன் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள அமாவாசை வழிபாடு நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்பாா்கள். எனவே பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைத்தல், போதிய அளவில் காவலா்களை பாதுகாப்பு பணி, கோயில் ஊஞ்சல் மண்டபம் மற்றும் கிழக்கு மண்டபத்தின் மேற்பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மாவட்டக் காவல் நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒருவழிப் பாதை மின் வழித்தடங்களை சரி செய்து விழா நாள்களில் சுழற்சி முறையில் மின் பணியாளா்கள் 24 மணிநேரமும் பணியில் இருப்பதையும், வாகனம் நிறுத்துமிடங்களில் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்த மின்வாரியத்தினா் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இதேபோல் பக்தா்களுக்குத் தேவையான பேருந்து வசதிகள், மருத்துவ முகாம்களை அமைத்தல், தீயணைப்பு வாகனங்களை தயாா் நிலையில் வைத்தல், தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்தல் போன்ற பணிகளை துறைசாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான் ஷு நிகம், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.