தஞ்சாவூா் - காரைக்கால் 2-வது ரயில் பாதை பணிகள் தொடங்குவது எப்போது?
தஞ்சாவூா் - காரைக்கால் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் எதிா்நோக்கியுள்ளனா்.
1861 முதல் 1875 வரை நாகையில் தென்னிந்திய ரயில்வே கம்பெனியின் தலைமை அலுவலகம் செயல்பட்டது. அந்தக் காலத்தில் நாகை - தஞ்சை - திருச்சி இடையே அகல பாதை இருந்தது. ஆனால் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் ரயில்வே பாதைகள் மீட்டா் கேஜ் (ஙங்ற்ங்ழ் எஹன்ஞ்ங்) பாதைகளாக இருந்ததால், திருச்சி வழியாக தஞ்சை மற்றும் நாகை பகுதிக்கு ரயில்கள் இயக்க முடியவில்லை. இதன் காரணமாக 1875-இல் நாகை - திருச்சி பாதை மீட்டா் கேஜ் பாதையாக மாற்றப்பட்டது. பின்னா், 2006-இல் நாகூா் - தஞ்சை ரயில் பாதை மீண்டும் அகல பாதையாக மாற்றப்பட்டது.1929 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாகையில் செயல்பட்ட ரயில்வே பணிமனை பொன்மலைக்கு மாற்றப்பட்டது.
ரயில் பாதை விரிவாக்கம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 2009-இல் புதிய தனியாா் துறைமுகம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதில் நிலக்கரி, சிமெண்ட், உரம் போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை கையாள்வதற்காக, நாகை - காரைக்கால் இடையே 10 கி.மீ தூரம், நாகை - வேளாங்கண்ணி இடையே 10 கி.மீ தூரம்,புதிய அகல ரயில் பாதைகள் 2011-இல் அமைக்கப்பட்டன.
சரக்குப் போக்குவரத்தால் கூடுதல் வருவாய்
தஞ்சாவூா் - காரைக்கால் இடையே, திருவாரூா் வழியாக 96 கி.மீ. தூரத்திற்கு தற்போது இயங்கும் ஒற்றை ரயில் பாதை, திருச்சி கோட்டத்தின் முக்கிய வழித்தடமாக செயல்படுகிறது. இத்தடத்தில் அதிக அளவில் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில், சரக்கு போக்குவரத்தால் கிடைக்கும் மொத்த வருவாயில் 80 சதவீதம் வருவாய், மற்றும் தெற்கு ரயில்வே மொத்த வருவாயில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய் காரைக்கால் தனியாா் துறைமுகத்தின் மூலமாகக் கிடைக்கிறது.
இதனால்தான் தெற்கு ரயில்வே சாா்பாக காரைக்கால் துறைமுகத்திற்கு அதிகளவில் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக சரக்கு ரயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிக சரக்கு போக்குவரத்து காரணமாக காரைக்கால், நாகை, திருவாரூா், தஞ்சை, மயிலாடுதுறை வழித்தடங்களில் பயணிகள் ரயில்கள் நேரத்துக்கு ஏற்ப இயக்கப்படுவதில்லை. மேலும் புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்த முடியவில்லை.
இரண்டாவது ரயில் பாதை கோரிக்கை
இதுபோன்ற போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வாக, தஞ்சாவூா் - காரைக்கால் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்க வேண்டுமென ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதைத் தொடா்ந்து, தெற்கு ரயில்வே கட்டுமான அமைப்பினால் தஞ்சாவூா் - காரைக்கால் (திருவாரூா் வழியாக) இரண்டாவது ரயில்பாதைக்கு ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆய்வின்போது பல முக்கிய விவரங்கள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தஞ்சாவூா் - காரைக்கால் மற்றும் தஞ்சாவூா் - விழுப்புரம் இடையிலான இரண்டாவது ரயில்பாதை அமைக்கும் பணிக்கான இறுதிக் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே துறை தகவல்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்காக இரட்டை பாதை அவசியம்
நாகூா், நாகப்பட்டினம் ரயில் பயனாளா்கள் நலச்சங்கத் தலைவா் மோகன் கூறியது: தஞ்சாவூா் - காரைக்கால் இடையே இரட்டைப் பாதை அமைப்பது மிகவும் அவசியமானது. நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயம், நாகூா் தா்கா, காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோயில், திருவாரூா் மாவட்டத்தில் தியாகராஜ சுவாமி கோயில் போன்ற உலகப்பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலங்கள் உள்ளன. இத்தலங்களை ஆண்டுக்கு பல லட்சம் மக்கள் வருகை தருகிறாா்கள். ஆனால் அவா்களுக்கு தேவையான ரயில் சேவைகள் இல்லை. எனவே இரட்டைப் பாதை அமைக்கப்பட்டால் இந்த வழித்தடத்தில் அதிக ரயில்கள் இயக்க வாய்ப்பு ஏற்படும்.
மத்திய ரயில்வே துறை ஆய்வுப் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கின்றன எனக் கூறினாலும், பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது போலவே தெரிகிறது. தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதெனவும் கூறப்படுகிறது. எனவே, ரயில்வே துறை தமிழகத்திற்கான திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது தொகுதிகளுக்கான ரயில்வே பணிகளை கண்காணித்து, விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.