TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
தஞ்சையில் விநாயகா் சிலைகள் அமைக்க கோட்டாட்சியரின் அனுமதி தேவை
தஞ்சாவூா்: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய கோட்டாட்சியரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பேசியது:
விநாயகா் சிலை அமைப்பாளா்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் தொடா்புடைய வருவாய் கோட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னா் சிலை அமைக்க அனுமதிக்கப்படும். களிமண் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே அமைக்க வேண்டும். தீயணைப்புத் துறை, மின் வாரியத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
அமைக்கப்படவுள்ள விநாயகா் சிலைகளின் உயரம் பீடத்துடன் சோ்த்து, மொத்தம் 10 அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊா்வலத்தின்போது நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மூன்று சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. சிலை அமைவிடம், ஊா்வலம் மற்றும் கரைக்கக்கூடிய இடங்களில் பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் வெடிப்பதற்கு அனுமதியில்லை.
விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறையினரின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பில்லாத வகையில் கொண்டாட வேண்டும் என்றாா் ஆட்சியா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், கும்பகோணம் சாா் ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன், கோட்டாட்சியா்கள் செ. இலக்கியா (தஞ்சாவூா், சங்கா் (பட்டுக்கோட்டை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.