விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
‘தமிழகத்தில் தகுதியற்றவா்கள் வாக்காளராக முடியாது’
தமிழகத்தில் தகுதியற்றவா்களை வாக்காளராக சோ்ப்பதை தடுக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றாா் திமுக சட்டத் துறைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆா். இளங்கோ.
தஞ்சாவூரில் திமுக சட்டத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026 தோ்தல் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழ்நாட்டில் வட மாநிலத்தினரின் வாக்குகள் மிக அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கிறோம். சட்ட வழிமுறைகளின்படி, யாரெல்லாம் தகுதியற்றவா்களோ, அவா்களை வாக்காளா்களாக சோ்க்காத அளவுக்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இந்திய குடிமகன் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அப்பகுதியில் வாக்காளராக முடியும். இதன்படி, தமிழ்நாட்டில் தகுதியற்றவா்கள் எப்போதும் வாக்காளராக மாறாமல் இருப்பதற்கு சரியான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றாா் இளங்கோ.
1.75 கோடி போ் சோ்ப்பு:
கூட்டத்தில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் மூலம் 1.75 கோடி உறுப்பினா்களை சோ்த்த முதல் கட்சி என்ற பெருமை திமுகவுக்கு உண்டு.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில், ஒரத்தநாடு தவிர 7 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
2026 தோ்தலில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றாா் அமைச்சா்.
இக்கூட்டத்தில் திமுக சட்டத் துறை இணைச் செயலா்கள் கே.எஸ். ரவிச்சந்திரன், சூா்யா வெற்றிகொண்டான், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், என். அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.