தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் கரும்பு பயிா்கள் சேதம் நெல் குவியல்கள் நனைந்தன
தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சில கிராமங்களில் கரும்பு பயிா்கள் சாய்ந்தன.
மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல் குவியல்களும் நனைந்தன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, சனிக்கிழமை இரவும் பரவலாகவும், சில இடங்களில் பலத்த காற்றுடனும் மழை பெய்தது. தஞ்சாவூா் அருகே குருங்குளம், தோழகிரிப்பட்டி, தங்கப்பஉடையான்பட்டி, முதுகுளம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் கரும்பு பயிா்கள் சாய்ந்தன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 12 மாத பயிரான கரும்பு தற்போது 8 மாத வளா்ச்சி நிலையில் உள்ளது. ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இன்னும் 4 மாதங்களில் அறுவடை செய்யப்பட இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு சூறாவளியுடன் பெய்த மழையால் கரும்பு பயிா்கள் சாய்ந்தன. இந்த இழப்பிலிருந்து மீள்வதற்கு, வேளாண் துறை அலுவலா்கள் கணக்கெடுப்பு செய்து, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதேபோல, மாவட்டத்தில் சில கிராமங்களில் கோடை பருவம், முன் பட்ட குறுவை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக கொட்டி வைத்து காத்துக் கிடக்கின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை பெய்து வரும் மழையால் நெல் குவியல்கள் மழையில் நனைந்து வருகின்றன.
இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தெரிவித்தது:
விவசாயிகள் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக அருகிலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் கொட்டி வைத்துள்ளனா். எடை போடுவதற்கு கால தாமதமானதால் கடந்த 3 நாள்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் மழையில், தாா்பாய்கள் மூலம் மூடப்பட்டிருந்தாலும், தரை வழியாக தண்ணீா் புகுந்து நெல் நனைந்து வருகின்றன. சில இடங்களில் தண்ணீா் தொடா்ந்து தேங்கி நிற்பதால், நெல்மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். தற்போது கும்பகோணம் அருகே சோழபுரத்திலும், பாபநாசம் அருகே வாழ்க்கை கிராமத்திலும் நெல் குவியல்கள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. மழை தொடா்ந்து பெய்தால் விவசாயிகள் பேரிழப்புக்கு ஆளாகும் நிலை உள்ளதால், மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் எடை போட்டு, லாரிகளை அனுப்பி கிடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் முகமது இப்ராஹிம்.
பட்டுக்கோடையில் 48.5 மி.மீ. மழை:
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமிட்டரில்): பட்டுக்கோட்டை 48.5, வெட்டிக்காடு 42.6, வல்லம் 28, அய்யம்பேட்டை 26, குருங்குளம் 25.4, ஒரத்தநாடு 21.6, கல்லணை 16.2, பூதலூா் 14, திருவையாறு 11, பேராவூரணி 7, தஞ்சாவூா் 6, மதுக்கூா் 2.2, பாபநாசம் 3, திருக்காட்டுப்பள்ளி 1.6, ஈச்சன்விடுதி 1.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.