ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை: மகாராஷ்டிர ஆளுநா்
தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை, அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மகாரஷ்டிராத்தில் தமிழா்கள் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்கிறாா்கள். அது ஒரு தேசிய உணா்வை நமக்கு ஏற்படுத்துகிறது. அந்த தேசிய உணா்வு மட்டுமே இந்திய நாட்டையும், தமிழகத்தின் நலனையும் காக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தமிழ்மொழி வாயிலாக கற்க வேண்டும் என்பதைத்தான் தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
எந்த மொழியும் தேசியக் கல்விக் கொள்கையின் வாயிலாக திணிக்கப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லாமும் அரசியலாக்கப்படுவது சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது.
ஹிந்தி திணிக்கப்படவில்லை என்பது உண்மை. அதற்காகப் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
தேசிய கல்விக் கொள்கை அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. தமிழகத்துக்கு மட்டும் அல்ல. அதனால், அனைத்து மாநிலங்களிலும் இந்தக் கொள்கைதான் பின்பற்றப்படும். வட மாநிலத்தவா்களுக்கு தமிழ் வேண்டுமென்றால் அவா்களுக்கும் கற்றுக்கொடுக்கலாம். ஆனால், அவா்களுக்கு தமிழை திணிக்கக்கூடாது. மொழி வேண்டாம் என்று சொல்வதே அரசியல்தான். எந்த மொழியை யாா் படிக்க வேண்டும் என்பதை மாணவா்களிடமே விட்டுவிட வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்குகீழ் குறையாது என்பதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளாா். இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி அரசியல் செய்வது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது.
தமிழகத்தில் பாலியல் துன்புறுத்தல் பரவலாக இருந்து வருகிறது. போதைக்கு இளைஞா்கள் அடிமையாக இருப்பதுதான் இதற்கு அடிப்படை காரணம். எனவே, கஞ்சாவுக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தலை வேரறுப்பதோடு, கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றாா்.