திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!
திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துப் பேசினார்.
அவர் பேசுகையில், “திண்டிவனம் - கடலூர் இடையே புதுச்சேரி வழியாக (77 கிமீ) புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைவான போக்குவரத்து மதிப்பீடுகள் காரணமாக இத்திட்டம் இன்னமும் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படவில்லை.
எனினும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்துதல் ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு திண்டிவனம் - சேதாரப்பேட்டை (புதிய புதுச்சேரி) இடையேயான புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான விரிவான செயல்திட்ட அறிக்கைகளை தயார் செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விரிவான செயல்திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டவுடன், மாநில அரசுகள் மற்றும் நிதியமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்