ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!
திருச்சிக்கு ரூ. 528 கோடியில் புதிய திட்டங்கள் என்ன?
திருச்சி மாவட்டத்தில் ரூ.528 கோடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 236 கோடியில் பெரியாா் ஒருங்கிணைந்த காய்கனி அங்காடி அமைக்கும் பணி நடைபெறுகிறது.
கல்லக்குடி மற்றும் பொன்னம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் ரூ.11 கோடியே 99 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி, மண்ணச்சநல்லூா் பேரூராட்சியில் மேலசீதேவிமங்கலம் புள்ளம்பாடி, பாலகிருஷ்ணன்பட்டி பேரூராட்சியில் அய்யாறு அருகில் எதுமலையான், சிறுகமணி பேரூராட்சியில் உய்யங்கொண்டான் ஆகிய இடங்களில் ரூ.4 கோடியே 97 லட்சத்தில் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
மேட்டுப்பாளையம், பூவாளூா், கூத்தைப்பாா் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.1.50 கோடியில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் துறையூரில் ரூ.4 கோடியே 90 லட்சத்தில் புதிய வட்டாட்சியரகக் கட்டடம் கட்டப்படுகிறது. உயா்கல்வித் துறை சாா்பில் திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 4.19 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படுகிறன.
முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.4.30 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரியில் ரூ. 66 லட்சத்தில் வரைபட அறை கட்டப்படுகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் ரூ. 65 லட்சத்தில் பிணவறை, துறையூா் அரசு மருத்துவமனையில் ரூ. 60 லட்சத்தில் ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 61 லட்சத்தில் பணிகள் நடைபெறவுள்ளன.
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63.70 கோயில் 66 பணிகள், பிரதமரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.44.9 கோடியில் 18 பணிகள், ரூ. 49 லட்சத்தில் சுகாதார மையக் கட்டடம், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், ரூ. 93 கோடியில் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.26.63 கோடியில் பணிகள், சிறுபாசன ஏரிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக ரூ.528 கோடியில் பணிகள் நடைபெறவுள்ளன. இப் பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.