திருவட்டாறு பேருந்து நிலையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு முதல்நிலை பேரூராட்சியிலுள்ள பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
நகராட்சி நிா்வாகம்-குடிநீா் வழங்கல் துறை சாா்பில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 2.55 கோடியில் இப்பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திறப்பு விழாவையொட்டி, பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி கல்வெட்டைத் திறந்தவைத்து, முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.
அப்போது அவா், இப்பேருந்து நிலையத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பயணிகள் இருக்கைகள், மின்சார வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள், இலவச மற்றும் கட்டண கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையத்திற்கு 70 அரசு பேருந்துகளும், 2 தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன. இப்பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமாா் 1800 பயணிகள் வருகை புரிகின்றனா் என்றாா்.
நிகழ்ச்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராமலிங்கம், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா சுரேஷ், செயல் அலுவலா் தா்மகுலசிங்கம், துணைத் தலைவா் சுந்தர்ராஜ், பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகக் கண்காணிப்பாளா் சத்தியதாஸ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜான்சன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜெகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.