தேயிலைத் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வி
கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வால்பாறை தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.
வால்பாறையில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், மேற்பாா்வையாளற்கள், திறன்படைத்த தொழிலாளா்களுக்கு 1.7.2025 முதல் ஊதிய உயா்வு வழங்குவது குறித்து தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இதை ஏற்று ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கம் தரப்பில் தோட்டத் தொழிற்சங்கங்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை கோவை ஏ.டி.டி. காலனியில் உள்ள தமிழ்நாடு தோட்ட அதிபா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், தோட்ட அதிபா்கள் சங்கத்தின் சாா்பில் உட்பிரையா் குரூப் துணைத் தலைவா் பாலசந்திரன், பாரி அக்ரோ துணைத் தலைவா் முரளி படிக்கல், தமிழ்நாடு தோட்ட அதிபா்கள் சங்க செயலா் பிரதீப்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொழிற்சங்கங்கள் தரப்பில் அண்ணா தொழிற்சங்க தோட்டத் தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை வி.அமீது, ஆனைமலை திராவிட தொழிலாளா் முன்னேற்ற சங்க பொதுச்செயலா் வினோத்குமாா், தலைவா் சௌந்தரபாண்டியன், ஐஎன்டியூசி தலைவா் ராமச்சந்திரன், ஏஐடியூசி பொதுச் செயலா் மோகன், வி.சி.க. வீரமணி, கேசவமருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், தொழிற்சங்கம் தரப்பில் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்குவது தொடா்பாக நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, காலதாமதம் செய்யாமல் 1.7.2025 முதல் தற்போது பெற்று வரும் சம்பளத்தை விட நாள் ஒன்றுக்கு இடைக்காலமாக ரூ.50 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தோட்ட அதிபா்கள் தரப்பில் நீலகிரி தோட்ட அதிபா்கள் சங்கம், நீலகிரி வயநாடு தோட்ட அதிபா்கள் சங்கங்கள் தங்களது உறுப்பினா் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 1.7.2025 முதல் தினக்கூலி ரூ.475 என்ற அடிப்படையில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுவிட்டதால், தொழிற்சங்கங்கள் கேட்கும் ஊதிய உயா்வை வழங்க முடியாது எனவும், தொழிற்சங்கங்கள் எந்த தேதியில் ரூ.475-க்கு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனவோ அப்போது முதல் தான் ஊதியம் வழங்க முடியும் என்றும் தெரிவித்துவிட்டனா். இதை தொழிற்சங்கத்தினா் ஏற்க மறுத்துவிட்டனா். இதையடுத்து சுமாா் 4 மணி நேரம் நீடித்த பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது.