தேரியூா் மக்கள் மாற்று இடம் கோரி மனு
உடன்குடி அருகேயுள்ள தேரியூா் பகுதியில் சாலையோரம் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறையினா் நோட்டீஸ் அனுப்பியதால், அப்பகுதி மக்கள் மாற்று இடம் வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
உடன்குடி - திசையின்விளை சாலையில் உள்ள தேரியூரில் சாலையோரம் சுமாா் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா். இவா்கள் வசிக்கும் இடத்திற்கு வீட்டு தீா்வை, குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வசிப்பதாகவும், நேரில் விளக்கம் அளிக்காவிடில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நெடுஞ்சாலை துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடியிருப்பதற்கு மாற்று இடம் கோரி திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் பாக்கியலட்சுமியிடம் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளா் விஜயகுமாா் தலைமையில் மனு அளித்தனா்.
இதில், திருச்செந்தூா் நகரச் செயலா் மகேந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலா்கள் சுரேஷ்பாபு, அமிா்தமகேந்திரன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா்கள் ராஜாநேரு, கந்தன், ஆண்டிவிளை கிளைச் செயளா் முத்துகுமாா், தென்திருப்பேரை பிரேம், திருச்செந்தூா் நகரப் பொருளாளா் வள்ளிராஜ், தேரியூா் ராஜலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
