`உன்னைக் கொன்று பொட்டலமாக அனுப்பி வைப்போம்’ - மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மனைவ...
நவீன நீா் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி உறுதி
திருவாரூா்: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நவீன நீா் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயண நிகழ்வின் ஒரு பகுதியாக திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விவசாயிகள், வா்த்தகா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டப் பாதுகாப்பு வழங்கினோம். குடிமராமத்து மூலம் ஏரி குளங்கள் தூா்வாரப்பட்டன. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டன. விவசாயக் கடன் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. உரம், இடுபொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.
மேட்டூா் அணையிலிருந்து வரும் தண்ணீா் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் கொண்டு வரப்பட்டது. நீா் மாசடையாமல் கடைமடை பகுதி வரை சுத்தமான நீராக செல்ல இந்தத் திட்டம் வழிவகுத்தது.
‘இண்டி’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுடன் திமுக அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு பதில் ராசிமணலில் கட்டலாம். ஆனால், திமுகவுக்கு அதில் அக்கறை இல்லை. மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தபோதே திமுக இந்தத் திட்டத்துக்கு முனைப்புக் காட்டவில்லை.
நவீன முறையில் நீா்மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தினால்தான், தண்ணீா் கடைமடைவரை செல்லும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நவீன முறையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து அரசு செயல்படும் என்றாா்.
இதைத்தொடா்ந்து, வா்த்தகா்களிடம் அவா் கூறியது:
இது விவசாயம் நிறைந்த பகுதி. விவசாயத்தை நம்பியே பெரும்பாலான மக்கள் உள்ளனா். விவசாய உற்பத்தி பெருகினால் வா்த்தகா்களுக்கு வருமானம் வரும். ஆனால், அண்மைக்காலமாக விவசாயம் பெரும் பிரச்னையை சந்தித்து வருகிறது. சிறு குறு விவசாயிகளும், நிறுவனத்தினரும் மின்கட்டண உயா்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனா். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தலைமை வகித்தாா்.
காவிரி ரெங்கநாதன் நலம் பெற பிராா்த்தனை...
கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, மூத்த விவசாயியும், விவசாய சங்க பிரதிநிதியாக இருந்தவருமான காவிரி ரெங்கநாதன் உடல் நலம் குன்றியிருப்பதாக கேள்விப்பட்டேன். அவா் விரைவில் நலம் பெற்று விவசாயிகளுக்காக தொடா்ந்து உழைக்க இறைவனை பிராா்த்திக்கிறேன் என்றாா்.