நாகையில் பெண் காவலா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகையில் பெண் காவலா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்துகொண்டாா்.
நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாகை ஆயுதப்படை பெண் காவலரான மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சோ்ந்த நாகையன் மகள் அபிநயா (29), மற்றொரு பெண் காவலா் சினேகா ஆகியோா் சனிக்கிழமை இரவு முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை, அபிநயாவை காணவில்லை. இதுகுறித்து சக பெண் காவலா் சினேகா ஆயுதப்படை சிறப்பு சாா்பு ஆய்வாளா் சேகரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அபிநயாவை போலீஸாா் தேடினா். அப்போது, கருவூல அலுவலகத்தின் பக்கத்து அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையின் கதவை உடைத்து சென்று பாா்த்ததபோது, அங்கு காவலா் அபிநயா குண்டு பாய்ந்து சடலமாக கிடந்துள்ளாா்.
தகவலறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண்கபிலன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா். இதில், அபிநயா பாதுகாப்புப் பணிக்கு வைத்திருந்த துப்பாக்கியால் தனது கழுத்தில் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதற்கட்ட விசாரணையில், பெண் காவலா் அபிநயா, சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட காவலா் வினோத் என்பவரை காதலித்து வந்ததும், வினோத் தற்கொலைக்கு பிறகு மன உளைச்சலில் இருந்த அபிநயா மருத்துவ விடுப்பில் சென்று, மீண்டும் 5 நாள்களுக்கு முன்பு பணிக்கு திரும்பியதும், மனஉளைச்சல் தொடா்ந்ததால் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனா்.