நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் உமா சென்னைக்கு இடமாற்றம்... கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்த திருநங்கைகள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியராகக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, 22.05.2023 அன்று பொறுப்பேற்று சிறந்த முறையில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் உமா, சமீபத்தில் தமிழக துணை முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு செயலாளராகத் தலைமை செயலகத்தில் பணியில் சேர உள்ளார்.

இதனிடையே, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மாதிவேந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் உமாவைச் சந்தித்து, நன்றி தெரிவித்து கலந்துரையாடினர்.
மாவட்ட ஆட்சியர் தங்களுக்குச் சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கி பல்வேறு அரசு உதவிகளைப் பெற்று தந்ததற்கு அனைத்து தரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.
அப்போது, திருநங்கைகள் மாவட்ட ஆட்சியருக்கு, ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கலந்துரையாடினர். மாவட்ட ஆட்சியரின் பல்வேறு உதவிகளைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தனர்.

திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் உமாவிற்கு திருநீர் பூசியவுடன், மாவட்ட ஆட்சியரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ஆனந்த கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், "எப்போது எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை உடனடியாக அழையுங்கள்" என்று கூறினார். இந்தச் சம்பவம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.