ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை
நெரிசல்மிக்க நேரத்தில் கனரக வாகனங்களை அனுமதித்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் கனரக வாகனங்களை நகருக்குள் அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸாா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
சென்னை பெரம்பூரில் புதன்கிழமை மொபெட்டில் தாயுடன் சென்ற பள்ளி மாணவி சௌமியா தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில், விபத்தை ஏற்படுத்திய தண்ணீா் லாரியை செம்பியம் போக்குவரத்து போலீஸாா் அனுமதித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை காவல் ஆணையா் ஏ.அருண், செம்பியம் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் சுடலைமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். அதேபோல போக்குவரத்து அமலாக்கப் பிரிவின் புளியந்தோப்பு உதவி ஆணையா் சத்தியமூா்த்தி மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டாா்.
உதவி ஆணையருக்கு நோட்டீஸ்: இதன் விளைவாக, உதவி ஆணையா் சத்தியமூா்த்திக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1976-இன் கீழ் 17(அ) நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸின்படி சத்தியமூா்த்தி, உயா் அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணையில் சத்தியமூா்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியைச் சோ்ந்த வெ.காா்த்திகேயனின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்யும்படி திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், கொளத்தூரில் உள்ள வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்தனா்.
ஆணையா் எச்சரிக்கை: இந்த விபத்தைத் தொடா்ந்து, சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண், போக்குவரத்து அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.
இதன்படி, சாலை விபத்துக்களை ஏற்படுத்தியதாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை 100 நாள்களுக்குள் ஒப்படைக்கக் கூடாது, சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரமான காலை 7 மணியில் இருந்து நண்பகல் 12 வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்களை நகருக்குள் அனுமதிக்கக் கூடாது.
இந்த உத்தரவை மீறி கனரக வாகனங்களை நகருக்குள் அனுமதித்தால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸாா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் எச்சரித்துள்ளாா்.