ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
நெருப்பெரிச்சல் பாறைக் குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: மக்கள் - பாஜகவினா் முற்றுகை!
திருப்பூா் மாநகராட்சியின் குப்பைகளை நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பாஜகவினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் தினந்தோறும் சுமாா் 700 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்தக் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படாமல் செயல்படாத கல்குவாரி பாறைக்குழிகளில் நேரடியாக கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக பாறைக் குழிகளை சுற்றி உள்ள பகுதி பொதுமக்கள் கடுமையான துா்நாற்றம், ஈக்கள் தொல்லை, நோய்த் தொற்றுக்கு ஆளாவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
முதலிபாளையம் பாறைக்குழி நிரம்பிய நிலையில் காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டன. அப்பகுதி பொதுமக்கள் குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடா்ந்து தற்போது நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்களும் பாஜகவினரும் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து திருப்பூா் மாநகர மேயா் என்.தினேஷ்குமாா், அரசு அதிகாரிகள் அங்கு வந்தனா். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் சுமாா் 100 லாரிகளில் குப்பைகள் அகற்றப்பட்டன. அங்குள்ள அனைத்துக் குப்பைகளையும் 2 நாள்களில் அகற்றி விடுவதாக அதிகாரிகள் அளித்த உறுதியைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.