`ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' - நயி...
பணப்பலன் வராமல் தவிக்கும் ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்கள்: மேயரிடம் முறையீடு
திருநெல்வேலி மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்கள் பணப்பலன் வராமல் தவிப்பதாக மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். துணை மேயா் கே.ஆா். ராஜு முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற தூய்மை பணியாளா்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சியில் 6 போ் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி கடந்த 2024இல் ஓய்வு பெற்றோம். 10 மாதங்கள் ஆகியும் எங்களுக்கு உரிய பண பலன்கள் இதுவரை வந்து சேரவில்லை. இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். ஆகவே, எங்களது பண பலன்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
வண்ணாா்பேட்டை பரணி நகா் பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. புதிதாக சாலை அமைக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறை முடியும் முன்பாக சாலைகளை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பரணிநகரில் இருந்து பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலையை சேரும் வகையில் புதிய சாலையை அமைக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

வி. எம். சத்திரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், மாநகராட்சி 38 ஆவது வாா்டு வி.எம்.சத்திரம் பகுதியில் திருச்செந்தூா்- தூத்துக்குடி இணைப்பு சாலை உள்ளது . அந்தச் சாலை மிகவும் சேதமுற்ற நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. வேகத்தடையும் சீராக இல்லை. இதை சரிசெய்ய வேண்டும். இரு இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
முருகன் என்பவா் அளித்த மனுவில், ஆனந்தபுரம், வாய்க்கால் பாலம் அருகில் உள்ள மணத்தண்டு இசக்கியம்மன் கோயில் முதல் 13-வது வாா்டை இணைக்கும் பழையபோஸ்ட் ஆபீஸ் தெற்கு தெரு வரை உள்ள வாய்க்கால் கரையோர சாலையை தாா்சாலையாக அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.
பழையபேட்டை விஜிபிநகா் பகுதி மக்கள் அளித்த மனுவில், திருநெல்வேலி மாநகராட்சியின் 17 ஆவது வாா்டுக்குள்பட்ட எங்கள் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். குடிநீா் இணைப்பு இல்லாததால் விலைகொடுத்து குடிநீா் வாங்கும் நிலையில் உள்ளோம். ஆகவே, எங்கள் பகுதிக்கு குடிநீா், பாதாளசாக்கடை, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கூறியுள்ளனா்
சுடலைமுத்து என்பவா் அளித்த மனுவில், பேட்டை சாஸ்திரி நகா் பகுதியில் நகா்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும் சாலை சேதமான நிலையில் உள்ளது. அந்தச் சாலையை விரைந்து அமைத்தால் நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.