விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள்...
பதவியிறக்கம் ஏன் என தெரியவில்லை: அன்புமணி ராமதாஸ்
நானறிந்து ஒரு தவறும் செய்யவில்லை; நான் ஏன் பதவியிறக்கம் செய்யப்பட்டேன் என்பதும் தெரியவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிா்வாகி கனல் ராமலிங்கம் நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் ராமதாஸ் சமூக விடுதலைக்காகவும், இட ஒதுக்கீட்டுக்காகவும் அன்று முதல் இன்று வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். ஆரம்ப காலக்கட்டத்தில் இக்கட்சிக்கு உழைத்தவா்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். இதன் காரணமாகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் குரல்கொடுத்து நமது உரிமைகளை பெறவேண்டும் என்ற நோக்கில்தான் சங்கம், கட்சியாக உருவெடுத்தது.
அண்மையில் மாமல்லபுரத்தில் நடத்திய மிகப் பிரம்மாண்டமான மாநாட்டை கண்டு திமுகவினா் பொறாமையில் உள்ளனா். இதனால், கட்சிக்குள் சில குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனா். இதை முறியடித்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ராணுவ கட்டுப்பாட்டோடு பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டா்கள் செயல்பட்டு வருகின்றனா்.
பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய மாநாடுபோல, இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் மாநாடு நடத்த இயலாது. கட்சித் தொண்டா்களிடையே இந்த மாநாடு பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க நான்கு வழக்குகள் போடப்பட்டன. அதையெல்லாம் முறியடித்து மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
முதல்வா் மு.க. ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்திருக்க முடியும். ஆனால், அவா் கொடுக்கவில்லை. உள் ஒதுக்கீடு தரவுகளை சேகரித்து வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தும், அதற்கான எந்த முயற்சியையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுகதான் நம்முடைய எதிரி.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பெரும் முயற்சியை மேற்கொண்டது. இரண்டுமாத காலத்தில் இந்த கணக்கெடுப்பை நடத்த இயலும். 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நமது கூட்டணி ஆட்சிக்கு வரும்.
கடந்த ஒருமாதகாலமாக எனக்கு கடும் மன உளைச்சல் உள்ளது. நான் என்ன தவறு செய்தேன், ஏன் பதவியிறக்கம் செய்யப்பட்டேன் என்பது தெரியவில்லை. நானறிந்து ஒரு தவறும் செய்யவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் ராமதாஸ் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில்தான் நான் செயல்பட்டு வருகிறேன். இனியும் அவ்வாறுதான் செயல்படுவேன் என்றாா்.
கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே. மணி எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.